திருச்சி கருமண்டபம், நியூ செல்வ நகர் விஸ்தரிப்பு பகுதியில் நேற்று தன்னை காப்பாற்றும்படி கதறியபடி வந்த இளம் பெண்ணை பேராசிரியர் ஒருவர் மீட்டு கன்டோன் மென்ட் பொலிஸ் மூலம் மகளிர் பொலிஸ் அதிகாரி சித்ராவிடம் ஒப்படைத்தார்.
அந்த பெண்ணிற்கு புத்தாடை கொடுத்து நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்தது. இதுபற்றி பொலிஸார் கூறியது,
பாதிக்கப்பட்ட பெண், ஆந்திர மாநிலம் மெகபூப்நகரில் வசிக்கும் ஷாலினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமீர்பேட் பகுதியில் ஒரு மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்து அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்தார். இவர் தங்கியுள்ள விடுதியில் சேலத்தை சேர்ந்த ஆஷா என்பவர் தங்கினார். இருவரும் தோழிகளாகினர்.
அப்போது ஷாலினியிடம், சேலத்துக்கு வந்தால் நிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி ஆந்திராவிலிருந்து நேற்று முன்தினம் ஷாலினி சேலம் வந்து ஆஷாவை சந்தித்தார். அன்று இரவு 10 மணிக்கு அவரை வடமாநில வாலிபர்கள் 3 பேரை அறிமுகப்படுத்தி, ‘இவர்கள் உனக்கு வேலை வாங்கித்தருவார்கள்‘ அவர்களுடன் காரில் செல், நான் பின்னால் வருகிறேன் என கூறி அனுப்பியுள்ளார்.
அவர்கள் ஷாலினியை காரில் ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு புறப்பட்டனர். வழியில் பெண்ணை 3 பேரும் காரிலேயே பலாத்காரம் செய்துள்ளனர். நள்ளிரவு திருச்சி வந்தபின், கருமண்டபம் நியூ செல்வா நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பூட்டினர். அங்கு 2 பெண்கள் இருந்துள்ளனர். அங்கும் ஷாலினியை மூவரும் பலாத்கா ரம் செய்துள்ளனர். உடல் சோர்வுற்ற அவர், தான் விபசார கும்பலில் சிக்கியதை உணர்ந்து கதறினார்.
நேற்று காலை யாரும் எதிர்பாராத நேரத்தில் கதவை திறந்து கொண்டு ஓடி வந்ததால் மீட்கப்பட்டார் என பொலிஸார் கூறினர். நேற்று ஷாலினியை உதவி கமிஷனர்கள் வீராசாமி, கணேசன் மற்றும் பொலிசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர்.
புதிய இடம் என்பதால் அடையாளம் காட்ட முடியவில்லை. இதையடுத்து செல்வநகரில் வீடு வீடாக பொலிசார் சோதனை நடத்தினர். தோழியாக பழகி நம்பவைத்து ஏமாற்றிய சேலம் ஆஷா மற்றும் 3 வாலிபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாலினியை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்புடன் அனுமதித்துள்ளனர்.